காஞ்சிபுரத்தில் 7-1-16 அன்று நடைபெற்ற நீதியரசர் வீ. ஆர். கிருஷ்ணய்யர் பிறந்தநாள் விழாவில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பெற்று சிறையிலிருக்கும் பேரறிவாளன் தாய் அற்புதம்மாள் பேசிய உணர்ச்சிமிக்க உருக்கமான பேச்சு நெஞ்சை நெகிழவைக்கும் கவிதை வடிவம் பெற்றுள்ளது.
பணம், பதவி உள்ளவர்கள் நிம்மதிக்குப்
பதிவுசெய்து வைத்ததுபோல் பாதுகாப்பு!
குணம், குடும்ப நிலையெல்லாம் குப்பைக் கூடைக்
குடியிருப்பு! புலிதாழ்ந்தால் எலிவெல்லாதா?
மனம் அறியத் தவறுசெய்யா மகனைப் பெற்று
வன்சிறைக்குப் பறிகொடுத்தேன்! வாழ்வி ழந்தேன்
தினம் தினம் நான் பேரறிவாளமுகத்தைச்
சிற்பியைப்போல் மனம் வடிப்பேன் கண்ணீரோடு!
சிறைச்சாலை அதிகாரி சான்று தந்தார்
""சிறந்தவனாய் நன்னடத்தைக் காட்டுகின்றான்
மறைவாகக் குற்றங்கள் ஏதும் செய்யான்
மனத்தளவில் பாராட்டும் படியே வாழ்ந்தான்
நிறைவாக இருக்கின்ற செயல்கள் கண்டோம்
நீர்மீது தாமரைபோல் நிலைத்தான்!'' என்றார்
அறைகூவி அவன் உயர்ந்தோன் என்பேன் ஆனால்
அவன் என்று விடுதலையை அடைவா னோகேள்!
"சஞ்சய்தத்' விடுதலையைக் கேட்டேன்! என்றன்
சந்தனத்தின் விடுதலைதான் என்றோ? நானோ
பஞ்சைப்போல் நரைவந்து தளர்ந்தேன்! செத்தால்
பால்வார்க்க வருவானோ பிள்ளை? இன்னும்
நஞ்சைப்போல் அவனை எண்ணிச் சிறையின் உள்ளே
நாள் கடத்திக் கொண்டிருப்பார்! கூண்டில் உள்ள
கொஞ்சுகிளி பறந்துவந்து வீட்டில் என்னைக்
கூப்பிடுமா? அவன்கையால் உணவுண் பேனா?
மரணதண்ட னைக்கெதிராய் மக்கள் கூடி
மாநாடு! மன்றங்கள்! நடத்து கின்றார்!
கிருஷ்ணய்யர் இன்றிருந்தால் மகனுக் காகக்
கேட்பாரே விடுதலையை! அவரும் இல்லை!
பெருகாதா என்கண்ணீர்! பேசி என்ன
பெறப்போகின் றேன்பாவி! பிள்ளை வாழ்வு
கருகாதா? எனத்துடிக்கும் தாயின் உள்ளம்
காணாதார் கண்என்ன கண்ணோ சொல்வீர்!
வெள்ளிநிலா பார்த்ததுண்டு! நான்பால் சோறு
விளையாட்டுக் காட்டிஊட்டியதை! பின்னால்
பள்ளிக்குப் போனமகன் படித்து வந்தான்
பார்த்துப்பார்த்தே நான் வளர்த்தேன்! அன்று
துள்ளிக்கு தித்துவந்தான் சிறைக்கம்பிக்குள்
தூங்கவா நான் வளர்த்தேன்? சாகும் போது
கொள்ளியிட வருவானோ? குழந்தையாகக்
கொடுத்தமுத்தம் தருவானோ? ஏங்குகின்றேன்!
பூமுடித்துப் பார்த்தேனா? தாலிகட்டும்
பொன்னாளைப் பார்த்தேனா? மருமகள்மேல்
போய்இடித்துப் பாய்ந்தேனா? மாமியார்போல்
புனைந்துகொண்டு நடித்தேனா? பாட்டி யாராய்
ஏன் அடிநான் என்வீட்டில் எடுக்க வில்லை?
எனைச்சுட்டால் எரிநெருப்பும் கண்ணீர் சிந்தும்
வாயடைத்துப் போய்விட்டால் குமுறும் உள்ளம்
வார்த்தைகளை வெளியனுப்பி வருந்திடாது
சுடுசோறு போட்டேனே! சிறையில் அங்கே
சுடுசோறு கிடைத்திடுமா? தலைவலித்தால்
மடிமீது படுக்கவைத்துப் "பத்து' போட்டேன்.
மகனே உனக்கங்கே தலைவலியா?
குடல்துடிக்கு தையா! நான் வரலா மா? கேள்!
குளிப்பதற்கு வெந்நீர்த ருவேனே! அங்கே
கிடைக்கிறதா இதமான வெந்நீர்? நெஞ்சைக்
கிழிப்பதுபோல் இருக்கிறதே நினைத்துப் பார்த்தால்!
பிள்ளைகுட்டி பெற்றவர்கள் இருக்கின் றாரா?
பேய்கள்தான் வசிக்கிறதா? மகன்மேல் அன்பை
உள்ளபடி உணர்ந்தோரும் வாழ்கின்றாரா?
ஓயாத அழுகையினை உரிமை ஆக்கித்
தள்ளியதோர் பள்ளத்தில் இந்தத் தாயைத்
தவிக்கவிட்டுப் போனமகன் திரும்பு வானா?
நள்ளிரவும் பகலாக மாறி என்னை
நடுங்கவைக்கச் செய்கிறதே! என்ன செய்வேன்?
என் கண்ணீர் இந்நாட்டில் ஒருவருக்கும்
ஏற்படவே கூடாது! தாங்க மாட்டீர்!
இம்மண்ணில் மலடியென இருந்திருந்தால்
இத்துயரம் எனக்கில்லை! சிங்கக்குட்டி
என்வயிற்றில் பிறந்ததுபோல் பிறந்தானே! ஓர்
இரும்புக்கம் பிக்குள்ளே இருக்கத் தானா?
சொன்னாலும் விளங்காது! விளங்கி னாலும்
துயருக்கு விடிவேது? விடைதான் ஏது?